ஷா ஆலம், மார்ச் 27 - இங்குள்ள ஒரு பேரங்காடியில் பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை கடையில் பணியாற்றும் பெண் ஒருவரை வாடிக்கையாளர் மிரட்டி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நேற்று முன்தினம் இரவு 8.42 மணிக்கு புகார் கிடைத்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
சந்தேக நபரும் அவரின் குடும்பத்தினரும் அந்த கடையில் வாங்கிய ஐஸ்கிரீம் மற்றும் ஸ்ட்ராபெரி பானத்திற்கு கட்டணம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்கு காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் சொன்னார்.
அந்நபர் 6.50 வெள்ளிக்கு விலையில் ஐஸ்கிரீம் மற்றும் ஸ்ட்ராபெரி பானம் வாங்கி அதற்காக 10.00 வெள்ளி நோட்டை வழங்கியுள்ளார். போதுமான சில்லறை இல்லாததால் அப்பெண் சந்தேக நபரிடம் 50 காசு நாணயம் உள்ளதா என கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டப் பெண் கல்லாப் பெட்டியை பலமாக சாத்தியபோது நிலைமை மோசமடைந்தது.
அப்பெண்ணின் செயலால் அதிருப்தி அடைந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை அவதூறாகவும் அவமதிப்பாகவும் பேசியுள்ளார் என முகமது இக்பால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடையிலிருந்த சக ஊழியர் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கொள்முதலை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் கடையின் சிசிடிவி காட்சிகளை தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதும் பொறுப்பற்ற நபர் ஒருவர் அதனை டிக்டோக்கில் பகிர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது என்றார் அவர்.


