ஜகார்த்தா, மார்ச் 27- இந்தோனேசியாவின் தூர கிழக்கு பாப்புவா பிராந்தியத்தில் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விற்பனை செய்தது தொடர்பில் மூன்று இராணுவ வீரர்களை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக ஷின்வா செய்தி வெளியிட்டுள்ளது .
இதேபோன்ற சட்டவிரோத ஆயுத விற்பனையில் சந்தேக நபர்களாக சமீபத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட ஏழு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பாப்புவாவில் ஆயுதமேந்திய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக அந்நாட்டின் இராணுவமும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையான கார்டென்ஸ் அமைதி நடவடிக்கை பணிக்குழு நேற்று அறிவித்தது.
அந்த ஏழு சந்தேக நபர்களும் வெவ்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்ததோடு சுதந்திர பாப்புவா இயக்கத்தின் ஆயுதப் பிரிவான மேற்கு பாப்புவா தேசிய விடுதலை இராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட வீரர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மேற்கு ஜாவா நகரமான பாண்டோங்கில் விசாரிக்கப்பட்டதாகப் பணிக்குழுத் தலைவர் பைசல் ரமதானி தெரிவித்தார்.
மூன்று வீரர்களும் தற்போது பாண்டோங்கில் உள்ள இந்தோனேசிய இராணுவத்தின் சிலிவாங்கி இராணுவக் கட்டளைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் பாதுகாப்புப் படையினர் பாப்புவான் பிரிவினைவாதிகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


