கோலாலாம்பூர், மார்ச் 25 - சமூக மேம்பாட்டுத் துறை, Kemas-க்கு சொந்தமான நாடு முழுவதும், குறிப்பாகப் புறநகர் பகுதிகளில் உள்ள 58 கட்டிடங்களை பழுதுபார்ப்பதற்குக் கூடுதல் நிதி தேவைப்படுவதாக துணைப் புறநகர் மேம்பாடு மற்றும் கூட்டரசு துணை அமைச்சர் டத்தோ ருபியா வாங் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 40 தபிகா மற்றும் `Taska kemas` கட்டிடங்களின் பராமரிப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், தற்போதுள்ள முழு உள்கட்டமைப்பையும் மேம்படுத்த இந்த தொகை போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே, 4 கோடியைத் தவிர, எங்களுக்கு மேலும் ஐந்து கோடியே 80 லட்சம் கூடுதல் நிதி தேவை என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் செனட்டர் ஹுசேன் இஸ்மாயில் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதனிடையே, குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்வதற்காக, 2022 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள தஸ்கா மற்றும் பராமரிப்பு மையங்களில் 5,500க்கும் மேற்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு குழந்தைகள் பராமரிப்பு மையம் சட்டம் மற்றும் 2012ஆம் ஆண்டு தஸ்கா விதிமுறைகளின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் விவரத்தார்.
ஒவ்வொரு கட்டிடமும் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கான அமைச்சின் முயற்சிகளில் கட்டம் கட்டமான மற்றும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கையும் அடங்கும் என்று அவர் கூறினார்.
குழந்தைகள் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகள் போன்ற பிரச்சனைகளை குறிப்பாக பதிவு செய்யப்படாத தஸ்காவில் நடப்பதை KPWKM எப்போதும் கடுமையாகக் கருதுவதாக நேன்சி மேலும் குறிப்பிட்டார்.
பெர்னாமா


