கோலாலம்பூர், மார்ச் 21- சமூகம் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், இன மற்றும் மத பிரச்சனைகள் எழுப்புவதை நிறுத்தும்படி தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நினைவூறுத்தினார்.
சமீப காலமாக, பொறுப்பற்ற சில தரப்பினர் இன மற்றும் மதம் சம்பந்தப்பட்ட கூற்றுகள் வெளியிடுவதைத் தொடர்ந்து அவர் அந்த நினைவுறுத்தலை செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் உள்ள கூற்றுகள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் உள்ளன. மதம் மற்றும் இனம் சார்ந்த பிரச்சனைகளைப் பேச வேண்டாம் என்றும் ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
மேலும், 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில் பிரதமர் இரு முறை பதவியில் இருக்க முடியுமா என்பது தொடர்பான பிரச்சனையை மதத்தின் அடிப்படையில் தவறு என்று கூறிய எதிர்கட்சி தலைவரின் கூற்றையும் ரமணன் சாடினார்.
இதற்கு காரணம், தவறான விஷயங்களைச் சித்தரிக்கும் போது, அனைத்து இன மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக இது போன்ற செயல்கள் தவிர்க்கப் பட வேண்டும் என்று ரமணன் கேட்டுக் கொண்டார்.
மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை பார்வையிட வந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
ஆலய இடமாற்றம் தொடர்பான பிரச்சனைக் குறித்து கருத்துரைத்த, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், இவ்விவகாரத்திற்கு சிறந்த தீர்வு கிடைக்கும் வரையில் பொறுமையாக இருப்பதோடு, தேவையற்ற கூற்றுகளை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.


