NATIONAL

ஜோகூர், சபா, சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைகிறது

21 மார்ச் 2025, 4:21 AM
ஜோகூர், சபா, சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைகிறது

கோலாலம்பூர், மார்ச் 21-  ஜோகூர், சபா மற்றும் சரவாக்கில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது.  இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ள நிவாரண  மையங்களில்  தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜோகூர் மாநிலத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஐந்து மாவட்டங்களில் 98  நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 3,018 குடும்பங்களைச் சேர்ந்த  10,763 பேராக அதிகரித்துள்ளது.

ஜோகூர் பாரு மாவட்டத்தில் அதிகப் பட்சமாக 4,291 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்  அதனைத் தொடர்ந்து குளுவாங் (2,163), கோத்தா திங்கி (1,762), பொந்தியான் (1,395) மற்றும் கூலாய் (1,152) ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின்  தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

சபாவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 குடும்பங்களைச் சேர்ந்த  1,248 பேராக அதிகரித்துள்ளது. இவர்கள் 11 வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

கோத்தா மருடுவில் ஐந்து கிராமங்கள், சண்டகான், பெலூரான், பைதான் மற்றும் மாதுங்கோங்கில் தலா இரண்டு கிராமங்கள் மற்றும் பிடாஸில் ஒரு கிராமம் உள்பட மொத்தம் 14 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சரவாக்கில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க மேலும்  மூன்று புதிய நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 274 பேரை எட்டியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.