புத்ரஜெயா, மார்ச் 19 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) நேற்று நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக மொத்தம் 45 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
பயணிகள் வருகை முனையத்தை மையமாகக் கொண்டு காலை 9.00 மணிக்குத் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த மூன்று மணி நேர நடவடிக்கையில் 115 வெளிநாட்டினர் சோதனையிடப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) ஒரு அறிக்கையில், தெரிவித்தது.
இந்த சோதனையில் 36 வங்காளதேச நாட்டினரும் ஒன்பது பாகிஸ்தானிய ஆடவர்களும் நாட்டின் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயணிகளைத் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்று விசாரணையின் முடிவில் அதிகாரிகள் முடிவு செய்ததாக ஏ.கே.பி.எஸ். கூறியது.
எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் இன்றி குடிநுழைவு இயக்குநரின் நிரந்தர உத்தரவு, நிர்வாக உத்தரவு மற்றும் நடப்பு உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக ஏ.கே.பி.எஸ். கூறியது.


