ஷா ஆலம், மார்ச் 14 — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இங்கு செக்சன் 2 இல் உள்ள ரமலான் சந்தைக்கு வருகை புரிந்து வர்த்தக தளங்களைப் பார்வையிட்டார்.
மாலை 6.15 மணிக்கு வந்த பிரதமர், 42 விற்பனைக் கடைகளைக் கொண்ட சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி, புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் ஆகியோரும் பிரதமருடன் உடனிருந்தனர்.
பின்னர், மாநில சமூகத் தலைவர்களுடன் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள
டேவான் ராஜா முடா மூசாவுக்கு பிரதமர் அன்வார் சென்றார்.
பிரதமர் தனது வருகையின் போது ரமலான் சந்தை வர்த்தகர்கள் நேர்மையுடன் வணிகத்தை நடத்துவதோடு பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாத்து லாபத்தை சமநிலைப்படுத்துவதற்கு ஏதுவாக நியாயமான விலையை நிலைநிறுத்தும்படி அறிவுறுத்தினார் என் வணிகர் ஒருவர் கூறினார்.
உணவு விற்பனைக்குத் தேவையான சுகாதாரத் தரத்தை முறையாக கடைபிடிக்கும்படி டத்தோஸ்ரீ அன்வார் எங்களுக்கு அறிவுறுத்தினார் எனக் கூறிய அவர், பிரதமரின் வருகைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த வருகையின் போது, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கூடத்திற்கு வந்த பிரதமர், சில்லரை இலக்கவியல் பரிவர்த்தனை முன்னெடுப்பையும் பார்வையிட்டார்.


