கோத்தா பாரு, மார்ச் 14 - நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகளில் போதுமான அளவு உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகம் உள்ளதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.
உள்ளூர் அரிசி மீண்டும் சந்தைக்கு வந்துள்ளதோடு அதன் விநியோகம்
திட்டமிட்டபடி கட்டுப்பாட்டில் உள்ளது. உலகளாவிய உணவு விநியோக பிரச்சினையை ஒருபோதும் முழுமையாக தீர்க்க முடியாது. ஆயினும், இது தற்காலிக தீர்வுதான் என்று அவர் இன்று அமைச்சின் ஊழியர்களுடனான இப்தார் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
நெல் கொள்முதல் விலை நிர்ணயம், நெல் உற்பத்தி செலவுகள் மற்றும் உச்சவரம்பு விலையில் உள்ள கட்டமைப்பு சிக்கல்களால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டதை உள்ளூர் வெள்ளை அரிசிக்கான ஒருங்கிணைந்த பணிக்குழு அடையாளம் கண்டுள்ளதாக மார்ச் 1 ஆம் தேதி அமைச்சு தெரிவித்திருந்தது.
பிற அரிசி வகைகளை உள்ளூர் அரிசியுடன் கலப்பதைத் தடைசெய்ய வகை செய்யும் குறிப்பிட்ட விதிகள் 1994 ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது. இதுவே அரிசி விநியோகப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியிருந்தார்.
அரசி விநியோகத்தில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த சமீபத்திய நிலவரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு பிரதமர் விவசாய அமைச்சுக்கு உத்தரவிட்டதாக அவரது மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைடா தெரிவித்தார்.


