கோலாலம்பூர், மார்ச் 13 - நேற்று மாலை பெய்த கடும் மழையால், கோலாலம்பூர், மஸ்ஜித் ஜாமேக் LRT நிலையத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.
மாலை 4 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. LRT நிலையத்திற்கும் பெரிய சேதாரம் ஏற்படவில்லை என `Rapid Rail` நிறுவனம் கூறியது. அங்கு இரயில் சேவையும் வழக்கம் போல் தொடர்ந்தன.
மேலும், இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தி இடத்தைத் துப்புரவுச் செய்யும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
பயணிகளின் நகர்வு சுமூகமாக இருப்பதற்காக, உதவிப் காவல்துறையும் கூடுதலாகப் பணி அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவத்திற்கான காரணத்தை விரிவாக ஆராயவும், மஸ்ஜித் ஜாமேக் நிலையத்தின் கட்டுமான அமைப்பு பயணிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்யவும் சிறப்பு செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு `Rapid Rail` மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.


