ஷா ஆலம், மார்ச் 13 - கெஅடிலான் ராக்யாட் கட்சித் (கெஅடிலான்) தேர்தலில் ஷா ஆலம் தொகுதியின் நடப்புத் தலைவர் ரோட்சியா இஸ்மாயிலை எதிர்த்து போட்டியிடவுள்ளதாகக் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறியுள்ளார்.
தொகுதியிலுள்ள பல இனங்களைச் சேர்ந்த மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்த இந்தப் பதவிக்கு தாம் போட்டியிட விரும்புவதாக தற்போது ஷா ஆலம் தொகுதியின் துணைத் தலைவராக இருந்து வரும் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
மேலும் பலவற்றை வழங்குவதற்காக நாங்கள் ஷா ஆலமில் ஆதரவை வலுப்படுத்துகிறோம். ஷா ஆலமின் முக்கியத்துவம் அதன் பல இன மக்களை உள்ளடக்கிய அமைப்பு முறையில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலமில் பக்கத்தான் ஹராப்பானின் பலம் கெஅடிலான் கட்சியை பெரிதும் சார்ந்துள்ளது. கெடிலான் பலவீனமாக இருந்தால் அது சிலாங்கூர் அரசாங்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நேற்றிரவு இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக நஜ்வான் தற்போது பதவி வகித்து வருகிறார்.
அதேசமயம், ரோட்சியா கடந்த 2020 முதல் 2023 வரை வீட்டு வசதி, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை வகித்தார்.
ஷா ஆலம் தொகுதித் தலைவர் பதவியை தாம் தற்காக்கவிருப்பதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோட்சியா முன்னதாகக் கூறியிருந்தார்.
அதே சமயம், கட்சியின் மகளிர் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார்.
கெஅடிலான் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெற உள்ளன. அதே நேரத்தில் மத்திய தலைமைத் தேர்தல் மே 24 அன்று நடைபெறும்.


