புத்ராஜெயா, மார்ச் 12 - உள்நாட்டினர் அல்லாத பிறப்பை உள்நாட்டினர்
பெயரில் தாமதமாகப் பதிவு செய்தது மற்றும் போலி கூடுதல் ஆதார
ஆவணங்களை பயன்படுத்தி பிறப்பை பதிவு செய்தது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஊழல் தடுப்பு ஆணையம்
(எம்.ஏ.சி.சி.) 16 பேரை கைது செய்துள்ளது.
நேற்று காலை 11.00 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட ஓப்
அவுட்லேண்டர் மற்றும் ஓப் பெர்த் நடவடிக்கைளின் வாயிலாக 20 முதல்
70 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக
எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது
குஷைரி யாஹ்யா கூறினார்.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும்
ஜோகூரில் உள்ள கிளினிக்குகள், வழக்கறிஞர் அலுவலகங்கள் உள்ளிட்ட
இடங்களில் சோதனையிட்டப்பட்டதாக அவர் சொன்னார்.
ஓப் அவுட்லெண்டர் நடவடிக்கையின் போது அரசு ஊழியரான பிரதான
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், தாமதமாக பிறப்பு
பதிவு, அதாவது பிரசவத்திற்கு 60 நாட்களுக்குப் பிந்தைய பதிவு என்ற
பெயரில் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் உதவியதாக அவர்
சொன்னார்.
இந்த மோசடிச் செயலில் பல்வேறு பிரசவ மையங்களை நடத்தி வரும்
டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட மருத்துவர் ஒருவரும் கைது
செய்யப்பட்டார். இவர் பிறப்பு தொடர்பான போலியான ஆவணங்களை
வெளியிட்டு வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
ஓப் பெர்த் நடவடிக்கையில் இந்த மோசடி நடவடிக்கையில் முகவராக
செயல்பட்டு வந்த பிரதான நபரும் கைது செய்யப்பட்டதாகவும் இவர் அரசு
ஊழியர் ஒருவருக்கு 18,000 வெள்ளி வரை லஞ்சம் வழங்கியதாகவும்
அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இவர்கள் தவிர, இந்த முகவரின் சேவையை பெற்ற ஆறு பொது மக்களும்
கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிறப்பு பத்திர விண்ணப்பம் தொடர்பான
ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் அந்த முகவரின் சேவையைப்
பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக எம்.ஏ.சி.சி.
தலைமையகம் மற்றும் சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு
கொண்டு வரப்பட்ட வேளையில் அவர்களுக்கு எதிரான தடுப்புக் காவல்
அனுமதி ஷா ஆலம் நீதிமன்றத்தில் பெறப்படும் என்றார் அவர்.


