சைபர்ஜெயா, மார்ச் 11 - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த விவாதங்கள், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.
இந்த ஒதுக்கீட்டிற்கான நிபந்தனைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் எடுக்கும் முடிவானது, எந்தவொரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மக்களுக்கான நிதி விநியோகம் முறையாக சென்றடைவதை உறுதி செய்வதே இலக்கு கொண்டுள்ளது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும், ஒதுக்கீடுகள் இல்லாதக் காரணத்தால் எதிர்கட்சி உறுப்பினர்கள் நிதிச் சுமையை எதிர்நோக்க நேரிட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், எதிர்கட்சிகளுக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு அரசாங்கம் மிகவும் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாகப் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த ஒதுக்கீடுகள் இன்னும் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல என்று கூறிய பிரதமர், இப்பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.


