கோத்தா பாரு, மார்ச் 11- தென்தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில்
நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள்
மலேசியாவுக்கு தப்பியோடுவதைத் தடுக்க பி.ஜி.ஏ. எனப்படும் பொது
தற்காப்பு படைப்பிரிவு மலேசிய-தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பை
வலுப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினர் நாட்டிற்குள் பதுங்கும் நோக்கில் எல்லையைத்
தாண்டுவதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்று பி.ஜி.ஏ. தென்கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி
டத்தோ நிக் ரோஸ் அஹான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
பி.ஜி.ஏ 7, பி.ஜி.ஏ. 9 மற்றும் செனோய் பிராக் படைபிரிவு அதிகாரிகளும்
உறுப்பினர்களும் தங்கள் பணி நடைமுறைகேற்ப எல்லைப் பகுதியில
ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அவர்
சொன்னார்.
நோன்பு மாதத்தில் பதுக்கல் மற்றும் எல்லை கடந்த குற்றச்செயல்கள்
அதிகம் நிகழும் என்பதால் எல்லைப் பகுதியில் நாங்கள் தொடர்ச்சியான
சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்
என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச்
சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகள் மலேசியாவுக்குள் நுழைவதைத்
தடுக்க பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம் என அவர்
குறிப்பிட்டார்.
எல்லை கடந்த குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை உளவுப் பிரிவு
வழங்கி வருவதோடு தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வருகிறது என
அவர் சொன்னார்.
சுங்கை கோலோக்கில் அண்மையில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்
மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும்
பாதிக்கப்படவில்லை என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
முகமது யூசுப் மாமாட் கூறியிருந்தார்.


