NATIONAL

காஸாவில் உணவு உத்தரவாதம் பாதிக்கப்படும் அபாயம்- ஐ.நா. எச்சரிக்கை

6 மார்ச் 2025, 6:46 AM
காஸாவில் உணவு உத்தரவாதம் பாதிக்கப்படும் அபாயம்- ஐ.நா. எச்சரிக்கை

ஹாமில்டன் (கனடா), மார்ச் 6 -  அனைத்து சரக்கு நுழைவுப் பாதைகளும்  தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் உதவிப் பொருள்  விநியோகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டு காஸாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை எச்சரித்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.

கடந்த ஜனவரி 19 ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து காஸா  மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றிய  அனைத்து சரக்கு நுழைவுப் பாதைகளும்  சமீபத்தில் மூடப்பட்டது  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என எங்கள் மனிதாபிமான பங்காளிகள் எச்சரிக்கின்றனர் என்று செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

காசாவில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் அபாயத்தில் இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள் காட்டி, டுஜாரிக் கூறினார்.

உதவிப் பொருள்  விநியோகத்தில் இடையூறுகள் தொடர்ந்தால் குறைந்தது 80 சமூக சமையலறைகளின்  செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடிப்படைப் பள்ளிப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்த விநியோகக்  கட்டுப்பாடுகள் காரணமாக காஸாவில் கல்வித் துறை பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என்று அவர் பேலும் வலியுறுத்தினார்.

முன்பு தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட பள்ளிகளுக்கு சில மாணவர்கள் திரும்ப முடிந்தது என்று அவர் கூறினார்.

பாலஸ்தீன பிரதேசங்களுக்கான மனிதாபிமான உதவி முயற்சிகளுக்கான நிதி உதவியில் ஏற்பட்டுள்ள முக்கியமான இடைவெளியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு  இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில், குறிப்பாக காஸாவில் உள்ள மிக அடிப்படையான மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான 400 கோடி அமெரிக்க டாலரில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானத் தொகையை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம் என்று அவர் கூறினார்.

தேவையின் அளவு மிகப்பெரியது, அதே போல் நிதி பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது என்று அவர் சொன்னார்.

ஹமாஸ் மற்றும் டெல் அவிவ் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கடந்த

ஞாயிற்றுக்கிழமை உதவி விநியோகங்களை நிறுத்த இஸ்ரேல் முடிவு செய்தது.

ஜனவரி மாத இறுதியில் அமலுக்கு வந்த ஆறு வார ஒப்பந்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.