கோலாலம்பூர், மார்ச் 6 - மின்சார மற்றும் மின்னியல் கழிவுகள்
பெருமளவில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் விவகாரம், தேங்காய்
சார்ந்த பொருள்களின் விலையேற்றம், தொடர்ச்சியான நெல் பயிரீடு
உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
முன்னுரிமை அளிக்கப்படும்.
நாட்டின் பல மாநிலங்களில் செயல்பட்டு வந்த மின் கழிவு
தொழிற்சாலைகளுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச்
சோதனையைத் தொடர்ந்து, அத்தகைய மின் கழிவுகள் நாட்டிற்குள்
கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து
இன்றைய அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது செத்தியு தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஷஹாரி ஜூக்கிர்னாய்ன் அப்துல்
காடீர் கேள்வியெழுப்புவார் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.
தேங்காய் பற்றாக்குறை காரணமாக தேங்காய் சார்ந்த பொருள்கள்
குறிப்பாக தேங்காய்ப் பால் விலையேற்றம் கண்டு அந்த உணவுப்
பொருளின் ஒட்டுமொத்த விநியோக முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது
குறித்த விவகாரத்தை அம்பாங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மக்களவையின் கவனத்திற்குக் கொண்டு
வருவார்.
நாட்டில் உணவு உத்தரவாதத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக தொடர்ச்சியான
நெல் பயிரீட்டு முறையை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம்
குறித்து பாடாங் பெசார் பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ருஷடான்
ருஸ்மி வினா தொடுப்பார்.
இந்த அமைச்சர்கள் கேள்வி பதில் அங்கத்திற்கு பிறகு 2025ஆம் ஆண்டு
(திருத்தம்) தகவல் தருவோர் பாதுகாப்புச் சட்ட மசோதா முதல்
வாசிப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.


