ஷா ஆலம், மார்ச் 4 - இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களில் மொத்தம் 322 பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மொத்தம் 238 விசாரணை அறிக்கைகள் அக்காலகட்டத்தில் திறக்கப்பட்டு 99 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் என அவர் கூறியதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுளளது.
கடந்த ஜனவரி 138 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட வேளையில் எஞ்சியவை கடந்த மாதம் திறக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
இவ்வாண்டில் எம்.ஏ.சி.சி. பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் ஓப் ஸ்கை நடவடிக்கையும் அடங்கும். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை ஏமாற்ற வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்த நிதி ஆலோசனை நிறுவனம் மீதான நடவடிக்கையும் அடங்கும் என்றார் அவர்.
'ஓப் ஏர்வேய்' நடவடிக்கையில் மின் சிகரெட்டுகளை கடத்துதல் மற்றும் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பில் சுங்க அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 12 வங்கிக் கணக்குகள் மற்றும் பல சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அண்மையில் 9வது பிரதமர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகள் உட்பட நான்கு நபர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்து 17 கோடி வெள்ளிக்கும் அதிகமான பணத்தைக் கண்டுபிடித்தது.
ஒரு பாதுகாப்பு வீட்டில் உள்ள மூன்று பாதுகாப்புப் பெட்டகங்களில் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்கக் கட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.


