ஷா ஆலம், பிப். 26 - மலேசியாவின் பொருளாதார மையம் மற்றும்
ஆசியானின் நுழைவாயில் என்ற நிலையை, 2025 சிலாங்கூர் அனைத்துலக
வர்த்தக உச்சநிலை மாநாட்டை (சிப்ஸ்) ஏற்பாடு செய்வதன் வழி மேலும்
வலுப்படுத்த முடியும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு
மையத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த உச்சநிலை மாநாடு 1,000
கோடி வெள்ளி பரிவர்த்தனையை பதிவு செய்யும் அதேவேளையில் 50,000
வருகையாளர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த வருடாந்திர
மாநாட்டில் புதிதாக இரு அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முதலீட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
சிலாங்கூர் அனைத்துலக பராமரிப்பு மாநாடு மற்றும் முன்பு சிலாங்கூர்
வான் போக்குவரத்து கண்காட்சி (எஸ்.ஏ.எஸ்.) என அழைக்கப்பட்ட
விண்வெளி உச்சநிலை மாநாடு ஆகியவையே அவ்விரு புதிய
அங்கங்களாகும் என அவர் சொன்னார்.
இந்த சிப்ஸ் 2025 வர்த்தக மாநாடு ஆசியான் உச்சநிலை மாநாட்டின்
அதிகாரப்பூர்வ நிகழ்வாகவும் விளங்கும். உள்நாட்டு மற்றும் அனைத்துலக
வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊடுருவுவதற்கு ஏதுவாக
தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள்
ஆகியோரை ஒன்றிணைப்பதற்குரிய வாய்ப்பும் இம்மாநாட்டில் கிட்டும் என
அவர் கூறினார்.
வான் போக்குவரத்து மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் முதன்மை
பங்களிப்பாளராக விளங்கும் சிலாங்கூர் அரசின் முயற்சிக்கு ஏற்ப இது
அமைகிறது என அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அன்பால் சாரி, மற்றும் இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமைச்
செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் ஆகியோர்
கலந்து கொண்டனர்.


