கோலாலம்பூர், பிப் 25 - அண்மையில் 18 உள்ளூர் ஊடக நிறுவனங்களின் டிக் டோக் கணக்குகள் முடக்கப்பட்டதன் தொடர்பில் விளக்கம் பெற, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) டிக் டோக் உடன் தொடர்பு கொண்டு வருகிறது.
பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசலில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான புகாருக்குப் பின்னர் அந்த அனைத்து டிக் டோக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக தொடக்கக்கட்ட தகவல்களின் வழி தெரிய வந்துள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"டிக் டோக்-இன் ஏ.ஐ தான் தற்போது பிரச்சனை ஆகும். ஏ.ஐ சில சமயங்களில் இலக்கிடப்பட்டதற்கும் மேல் செயல்படலாம். ஊடக தளங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை புரிந்து கொள்ளவில்லை.
மேலும், அதன் அறிக்கை சாதாரண மக்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டவை. எனவே இது தொடர்பில் விரைவில் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்," என்றார் அவர்.
இப்பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் இருக்க ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தமான கணக்குகளின் செயல்பாட்டை தமது தரப்பும், டிக்டாக் நிறுவனமும் ஆராயவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஊடக நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டிற்கு செயற்கை நுண்ணறிவு உருமாற்று திட்டத்தை ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட திட்டம் நடப்பில் உள்ள ஊழியர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் அப்புதிய தொழில்நுட்பம் வழியான முதலீடுகள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.


