ஷா ஆலம், பிப். 25 - சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு முழுவதும் 38
கோடியே 64 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 5,091 இணைய மோசடி
தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு 169 புகார்கள்
குறைந்து மொத்த புகார் எண்ணிக்கை 5,260 ஆகப் பதிவான போதிலும்
இழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு 292,093,847.17
வெள்ளியாகும். கடந்த 2024 ஆண்டு புகார்களின் எண்ணிக்கை குறைந்த
போதிலும் இழப்பின் மதிப்பு 2386,426,494.32 வெள்ளியாக உயர்வு
கண்டுள்ளது. இவ்விரு ஆண்டுகளில் பதிவான இழப்பு வேறுபாடு 9
கோடியே 40 லட்சம் வெள்ளியாகும் என அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கோலக் கிள்ளான் உறுப்பினர் அஸ்மிஸாம்
ஜமான் ஹூரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
கூறினார். சிலாங்கூர் மாநிலத்தில் இணைய மோசடிக் குற்றங்களால்
ஏற்பட்ட இழப்பு குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களில்
பெரும்பாலோர் ஓய்வு பெற்றவர்கள் அல்லது முழு நேர பணியில்
இல்லாதவர்கள் என்று அமிருடின் கூறினார்.
பொதுவாக முழு நேர வேலையில் இருப்போர் தங்களின் அன்றாடப்
பணியில் மும்முரமாக கவனம் செலுத்திக் கொண்டிருப்பர். மோசடிப்
பேர்வழிகள் பெரும்பாலும் அலுவலக நேரங்களில் மட்டுமே தங்கள்
நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார் அவர்.
ஆகவே மலேசிய தகவல் மற்றும் பல்லுடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) தனது பணியை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே சமயம் தற்போது மிகப்பெரிய அளவிலான வர்த்தக குற்றமாக மாறி வரும் இணைய மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாங்கள் தீவிரப்படுத்தி வருகிறோம் என அவர் சொன்னார்.


