கோலாலம்பூர், பிப். 21- நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இரு மாநிலங்களிலும் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் 133 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபுவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேராக உள்ளது. அவர்கள் அனைவரும் டேவான் டி'சூரி நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் லாடாங் ஜெலுபு, தாமான் பெக்கான் பாரு, தாமான் பண்டார் திங்கி மற்றும் கம்போங் செப்ரி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பாதிக்கப் பட்டவர்களில் 54 பெரியவர்கள், 28 சிறுவர்கள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்று ஜெலுபு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் முகமது நஜிப் அப்துல் கரீம் கூறினார்.
தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, பகாங் மாநிலத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் இன்னும் தெமர்லோவிலுள்ள லஞ்சாங் தேசியப் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
தெமர்லோ, கோல குராவ்வில் உள்ள பகாங் நதியில் மட்டுமே எச்சரிக்கை அளவில் நீர் மட்டம் இருந்து வரும் நிலையில் நீரின் போக்கு குறைந்து வருவதைக் காட்டுவதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை கூறியது.


