கோலாலம்பூர், பிப். 20 - கடந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை
பல்வேறு பொருளாதாரத் துறைகளில் 25,470 கோடி வெள்ளி மதிப்பிலான
அந்நிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை அமைச்சு கூறியது.
மொத்தம் 4,753 திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீடுகளின் வாயிலாக
159,347 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சு
குறிப்பிட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.7
விழுக்காடு அல்லது 23 கோடியே 2 லட்சம் வெள்ளி முதலீட்டு
அதிகரிப்பை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
இந்த முதலீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அதாவது 63.1 விழுக்காடு
சேவைத் துறை சார்ந்தவையாகும். 3,909 திட்டங்களை உள்ளடக்கிய இந்த
முதலீட்டின் மதிப்பு 16,070 கோடி வெள்ளியாகும் என அமைச்சு
தெரிவித்தது.
மொத்தம் 888 கோடி வெள்ளியை உட்படுத்திய 800 திட்டங்கள் (34.9%)
உற்பத்தி துறை சார்ந்தவையாகவும் 520 கோடி வெள்ளி மதிப்பிலான 44
திட்டங்கள் (2.0%) பிரதான துறை சார்ந்தவையாகவும் உள்ளன.
இந்த முதலீடுகளின் வாயிலாக சேவைத் துறையில் 100,914 வேலை
வாய்ப்புகளையும் உற்பத்தி துறையில் 58,017 வேலை வாய்ப்புகளையும்
பிரதான துறையில் 416 வேலை வாய்ப்புகளையும் உருவாக்க இயலும்
என்று மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு
கூறியது.
கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் நேரடி அந்நிய முதலீடுகள் குறித்து பாரிட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் முகமது இஸ்மி மாட் தாயிப் எழுப்பியக் கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.


