(ஆர்.ராஜா)
கிள்ளான், பிப் 19 - அதிக மக்கள் தொகை கொண்ட பரபரப்பான குடியிருப்பு பகுதியாக விளங்கி வரும் தாமான செந்தோசா இம்மாதம் 22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நகர அந்தஸ்தைப் பெறும்.
தாமான் செந்தோசா, ஜாலான் அப்துல் ஹமிட் 25 பொது மைதானத்தில்
நடைபெறும் சிறப்பு நிகழ்வில் கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார்
டத்தோ ஹாஜி அப்துல் ஹூசேன் இந்த குடியிருப்பு பகுதியை பண்டார்
செந்தோசாவாகப் பிரகனடப்படுத்துவார்.
தாமான் செந்தோசா நகரமாக அந்தஸ்து பெறுவதை முன்னிட்டு அன்றைய தினம்
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
மொத்தம் 25 வீடமைப்பு பகுதிகளைக் கொண்ட தாமான் செந்தோசா நகர அந்தஸ்தை அடைந்தவுடன் இங்குள்ள மக்களின் மனநிலையும் சிந்தனையும் மாறும் என்பதோடு இப்பகுதி உருமாற்றம் கண்டு வீடுகளின் விலையும் உயர்வு காணும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதே சமயம், கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் பொறுப்புகள் அதிகரிக்கப்பட்டு
இங்கு நிலவும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்
இயலும் என்று இன்று இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
மேலும், தாமான் செந்தோசாவுடன் இணைப்பைக் கொண்டுள்ள மேற்கு கடற்கரை
நெடுஞ்சாலை, கெசாஸ் நெடுஞ்சாலையை இணைக்கக் கூடிய ஜாலான் கெபுன்
சாலை மற்றும் எல்.ஆர்.டி.3 இலகு இரயில் திட்டம் ஆகியவை பூர்த்தியானவுடன்
இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து மையமாகவும்
விளங்கும் என்றார் அவர்.
சுமார் 40,000 பேர் வசிக்கக் கூடிய இந்த தாமான் செந்தோசா பகுதி எப்போதும்
எப்போதும் சுத்தமாகவும் பசுமையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
முன்பு பத்து அம்பாட் தோட்டமாக விளங்கிய இந்த தாமான் செந்தோசா கடந்த
80ஆம் ஆண்டுகளில் குடியிருப்பு பகுதியாக மேம்படுத்தப்பட்டது. தனியாருக்குச்
சொந்தமான சிறிய நிலங்கள் வீடமைப்பு பகுதியாக உருமாற்றம் கண்ட காரணத்தால் சீரான வடிகால் முறையையும் போக்குவரத்துத வசதியையும் கொண்ட நகரமாக இது விளங்கவில்லை.
மேலும், பல நிலங்கள் மேம்படுத்தப்படாமல் காடு மண்டிக் கிடப்பதால் இங்கு
அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பும்
கிட்டவில்லை. இப்பகுதி நகர அந்தஸ்தைப் பெறும் போது மாநகர் மன்றம்
கூடுதல் கவனம் செலுத்தி இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு
கிட்டும் என்றார் அவர்.


