டொரோண்டோ, பிப் 18 – 80 பேருடன் சென்ற `Delta Air Lines` ஜெட் விமானம் கனடாவின் டொரோண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, தலைக் குப்புறக் கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து 80 பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
தலைகீழாகக் கிடந்த CRJ-900 விமானத்திலிருந்து மக்கள் தடுமாறி செல்வதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள படங்களிலும் வீடியோக்களிலும் காண முடிந்தது.
இச்சம்பவத்தை அடுத்து விமான நிலைய செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேர தாமதங்களுக்குப் பிறகு உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.


