ஷா ஆலம், பிப். 18 - மொத்தம் 177 கோடி வெள்ளி மதிப்பிலான வெள்ளத்
தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும்படி மத்திய மற்றும் மாநில
அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தாமதப்படுத்தப்படும் பட்சத்தில் மாநில
அரசும் மக்களும் பெரும் இழப்பை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதில் மந்திரி
புசார் தலைமையிலான மாநில அரசு அலட்சியம் காட்டாது என
எதிர்பார்க்கிறேன். ஆகவே, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை
எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு
எடுக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மோசமான பேரிடர் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய வெள்ளப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசு துல்லியமான திட்டமிடலை
அமல் செய்யும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
மாசுபாடு காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை களைவதற்கும்
வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ‘வேஸ்ட் டு
எனர்ஜி‘ எனப்படும் கழிவுகளிலிருந்து எரிசக்தியைப் உருவாக்கும்
தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மாநில அரசு அதிகரிக்க வேண்டும்
எனவும் அவர் கூறினார்.
மாநில அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று மூன்றாம் தவணைக்கான
சட்டமன்றக் கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில்
அவர் இதனைத் தெரிவித்தார்.
திடக்கழிவுகளை எரிசக்தியாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை
மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
சுல்தான் கேட்டுக் கொண்டார்.


