கோல சிலாங்கூர், பிப் 15- இங்குள்ள ரெஸிடென்சி ராக்யாட் ஹார்மோனி மடாணி பெஸ்டாரி ஜெயா மக்கள் குடியிருப்பு திட்டம் (பி.ஆர்.ஆர்.) வரும் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்த சமீபத்திய அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
வரும் 2027ஆம் ஆண்டு தீபாவளியை புதிய வீட்டில் கொண்டாட முடியும் என்று நம்புகிறேன். இந்தத் திட்டத்தில் சமூகப் பூங்கா, ஜாகிங் தடம், சூராவ் மற்றும் இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு மழலையர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளன என்று அவர் சொன்னார்.
மாண்புமிகு (பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) தலைமையில் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் எப்போதும் கவனம் செலுத்தும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
வீடு என்பது அடிப்படை மனித உரிமை என்பதோடு அது ஒரு அவசியமான தேவையும்கூட என்று அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற பி.ஆர்.ஆர். ஹார்மோனி மடாணி பெஸ்தாரி ஜெயா திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்றிய வரவேற்பு உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின்
நிறுவனர் டான் ஸ்ரீ வின்சென்ட் டானும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
மொத்தம் 7.5 கோடி வெள்ளி செலவிலான இந்த திட்டம் மத்திய அரசு, சிலாங்கூர் அரசு, பெர்பாடானான் பிரிமா மலேசியா (பிரிமா) மற்றும் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் ஆகிய தரப்பின் கூட்டு முயற்சி என்று அவர் சொன்னார்.
இதில் 4 கோடி வெள்ளியை மத்திய அரசு வழங்கிய வேளையில் மேம்பாட்டு செலவுகளுக்காக மொத்தம் 3.5 கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கியது. இத்திட்டத்திற்கு பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் இலவசமாக 8.09 ஹெக்டேர் (20 ஏக்கர்) நிலத்தை வழங்கியது என்றார் அவர்.
மேரி தோட்டம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம் மற்றும் மினியாக் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த வீடுகளைப் பெற உதவுவதில் மடாணி அரசாங்கத்தின் அக்கறைக்கு இத்திட்டம் ஒரு சான்றாகும்.


