கோல சிலாங்கூர், பிப். 15- தொழிலாளர் குடியிருப்பு வசதியை மேம்படுத்துவதில் தோட்ட நிர்வாகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான முன்மாதிரியாக ஹார்மோனி மடாணி பெஸ்தாரி ஜெயா மக்கள் குடியிருப்பு திட்டம் (பிஆர்ஆர்) பயன்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக வீட்டுவசதி மேம்பாட்டைத் திட்டமிடுவதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு மூலம் தோட்ட நிர்வாகம் நிலம் வழங்குவதன்வாயிலாக இதனை சாத்தியமாக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.
பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் எஸ்டேட் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்ததன் வாயிலாக உருவான ஒத்துழைப்பு மாதிரியின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட ஹார்மோனி மடாணி பி.ஆர்.ஆர். திட்டம் கடந்த 27 ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய வீட்டுடைமைப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்தத் திட்டம் வெற்றிபெற நீண்ட காலம் பிடித்தது. வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் நில உரிமையாளரான டான் ஸ்ரீ வின்சென்ட் டானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டத்திற்காக நிலத்தின் ஒரு பகுதியை பெற்றுத் தந்தார்.
தோட்ட நிர்வாகம், ஊராட்சி மன்றம், மாநில அரசு ஆகியவற்றுடன் கோர் மிங் பேச்சுவார்த்தை நடத்தி இவ்விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு இந்த பி.ஆர்.ஆர். திட்ட மேம்பாட்டிற்கு ஒதுக்கீடுகளை வழங்க முடிவு செய்தது என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற பி.ஆர்.ஆர். ஹார்மோனி மடாணி பெஸ்தாரி ஜெயா வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார் இதனைக் கூறினார்.
பெஸ்தாரி ஜெயா, லாடாங் சுங்கை திங்கியில் உள்ள பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான 8.09 ஹெக்டேர் நிலத்தில் மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்ட 1,200 சதுர அடி கொணாட தொடர் வீடுகளை கட்டுவதை பி.ஆர்.ஆர். ஹார்மோனி மடாணி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுமார் ஏழரை கோடி வெள்ளி செலவிலான இந்த திட்டத்தை பிரிமா கார்ப்பரேஷன் மலேசியா நிறுவனம் மேற்கொள்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேரி தோடாடம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் திங்கி தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், மின்யாக் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களில் உள்ள 245 குடும்பங்களை உள்ளட்டக்கிய 1,250 குடியிருப்பாளர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


