ஷா ஆலம், பிப். 14 - சிலாங்கூரும் மத்திய அரசும் ஒரே ஆட்சியின் கீழ்
உள்ளதால் மாநிலத்தின் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நிரலை
விரைவுபடுத்தவும் பொருளாதார முன்னெடுப்புகளை துரித்தப்படுத்துவும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு நிர்வாக நடைமுறைகளை எளிதாக்கியுள்ளதோடு
மட்டுமல்லாமல் பல்வேறு உருமாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள்
வாயிலாக மக்களின் அன்றாட வாழ்வில் நேரடிப் பலனையும் தந்துள்ளது
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும், இந்த அணுக்கமான ஒத்துழைப்பு பல்வேறு மேம்பாட்டுத்
திட்டங்களை ஆக்ககரமான மற்றும் விரிவான முறையில் மேற்கொண்டு
மக்களின் நல்வாழ்வை வளப்படுத்துவதற்குரிய வாய்ப்பினையும்
உண்டாக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் (2014ஆம் ஆண்டு நீங்கலாக) தேசிய
பொருளாதாரத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் ஜி.டி.பி. (உள்நாட்டு மொத்த
உற்பத்தி) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில வேளைகளில் நாம்
மத்திய அரசுடன் இணக்க நிலையில் இல்லாத போதிலும் நமது
பொருளாதார நிர்வாகம் சீராக இருந்துள்ளதை இது காட்டுகிறது என அவர்
குறிப்பிட்டார்.
நாம் மத்திய அரசுடன் ஒரே குடையின் கீழ் செயல்படத் தொடங்கும்
போது பல விஷயங்கள் நாம் எளிதில் சமாளிக்கக் கூடியவையாக
மாறியுள்ளன. குறைந்த விலை வீடமைப்புத் திட்டப் பகுதிகளில் விரிவான
உருமாற்ற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்ட அமலாக்கத்தை இதற்கு
உதாரணம் காட்டலாம் என்றார் அவர்.
சிலாங்கூரைப் பொறுத்த வரை லெம்பா சுபாங் மற்றும் கம்போங் பாரு
ஹைக்கோம் ஆகிய இரு இடங்கள் உள்ளன. வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சுடன் நடத்தப்பட்ட இடைவிடாத பேச்சுகளின் பலனாக லெம்பா சுபாங் வீடமைப்பு பகுதி அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரே கூட்டணியின் கீழ் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது என்று அவர் சொன்னார்.


