ஷா ஆலம், பிப்.13 - அந்நிய முதலீட்டாளர்கள் மலேசிய பங்குகளை விற்பனை செய்வது குறித்த கவலையடையத் தேவையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த விற்பனை 2 டிரில்லியன் வெள்ளியிலிருந்து 0.2 விழுக்காட்டு சரிவை மட்டுமே உட்படுத்தியுள்ளதால் அது நம்பிக்கை இழப்பின் அறிகுறி அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
சந்தை சரிவு என்பது உலகளாவிய போக்கு எனக் கூறிய அவர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளில் அதிக அளவிலான பங்கு வெளியேற்றத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் வெளிநாட்டு பங்குகள் சுமார் 19 சதவீதமாக நிலையாக இருப்பதாகச் சொன்னார்.
ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தன. கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட முதலீட்டு மதிப்பு 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். ஜீலி, அமேசான், இன்ஃபினியன் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் மலேசியாவில் தொடர்ந்து முதலீடு செய்வது முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் அறிகுறியாகும் என அவர் சொன்னார்.
வெளிநாட்டு பங்குதாரர்கள் நிதியைத் திரும்பப் பெறுவது நம்பிக்கை இழப்பைக் குறிக்கிறது என்று சிலர் கூறலாம். இருப்பினும், எண்கள் வேறு கதையைச் சொல்கின்றன; இது சுமார் 19 சதவீதத்தில் நிலையாக உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், இது 19.5 விழுக்காடாக இருந்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 19.7 சதவீதமாக உயர்ந்தது. 2025 ஜனவரி நிலவரப்படி இது 19.4 சதவீதமாகவே உள்ளது. 0.2 சதவீத ஏற்ற இறக்கம் மலேசியாவின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையில் சரிவைப் பிரதிபலிக்காது என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
முன்னதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமீபத்தில் மலேசிய பங்குகளை விற்றதற்கான காரணங்களை விளக்குமாறு மச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமால் அன்வாரிடம் கோரியிருந்தார்.
சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் நிதி நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து வலுவான லாபத்தைப் பதிவு செய்து வருவதாக அன்வார் கூறினார். மேபேங்க் 9.7 சதவீத வளர்ச்சியையும், சி.ஐ.எம்.பி. 12.3 சதவீதத்தையும், பப்ளிக் வங்கி 5.8 சதவீதத்தையும் ஈட்டியுள்ளன.
மேலும், நோமுரா, ஜேபி மோர்கன் மற்றும் எச்.எஸ்.பி.சி. போன்ற உலகளாவிய நிதி நிறுவனங்கள் மலேசிய பங்குகளுக்கான தங்கள் பரிந்துரைகளை மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.


