கோலாலம்பூர், பிப் 8: மருத்துவ விசா மோசடி தொடர்பில் குடிநுழைவுத் துறையின் 22 அதிகாரிகளை, EAIC எனப்படும் அமுலாக்க நிறுவனங்களின் நெறிமுறை ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்கி குடிநுழைவுத் துறையும் ஒத்துழைப்புக் கொடுப்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தவறான நடத்தையில் ஈடுபடும் எந்தவோர் அதிகாரிகளையும் குடிநுழைவுத் துறை பாதுகாக்காது. அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என மக்களவையில் வழங்கிய பதிலில் அவர் சொன்னார்.
கடந்தாண்டு, மருத்துவ விசா என்ற போர்வையில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் மோசடி மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, 156 சமூக வருகை அனுமதி விண்ணப்பக் கோப்புகளை EAIC கைப்பற்றியது.
அவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தவர்கள், சட்டவிரோதமாக வேலை செய்வதற்காக பல ஆண்டுகளாக காணாமல் போய் விடுவது கண்டறியப்பட்டுள்ளது.


