கோலாலம்பூர், பிப். 6 - மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்
பேரில் பள்ளி வேன் ஓட்டுநர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் கடந்த மாதம் 29ஆம் தேதி அம்பாங் ஜெயா,
பிளாஸா பிளாமிங்கோ எதிரே உள்ள கார் நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.
ஐம்பது, 61 மற்றும் 52 வயதுடைய அந்த மூவரும் இம்மாதம் 3ஆம் தேதி
கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது அஸாம் இஸ்மாயில் கூறினார்.
அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில்
கைது செய்யப்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளைத் திருடுவதற்கு
பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளைத் திருடும் நோக்கில் சந்தேகப் பேர்வழி
ஒருவருக்குச் சொந்தமான வேனில் அதனை அம்மூவரும் ஏற்றியதாக
நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் வேலைக்கு பயன்படுத்தும் நோக்கில் 52
வயதுடைய சந்தேகப் பேர்வழியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர்
கூறினார்.
அந்த மோட்டார் சைக்கிளை கடந்த மாதம் 28ஆம் தேதி பூட்டிய நிலையில்
வைத்து விட்டுச் சென்ற அதன் உரிமையாளர் இம்மாதம் 2ஆம் தேதி
மாலை 3.30 மணியளவில் வந்து பார்த்த போது அது காணாமல்
போனதைக் கண்டு போலீசில் புகார் அளித்ததாக அவர் சொன்னார்.
சந்தேகப் பேர்வழிகளிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்களில்
இருவருக்கு போதைப் பழக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத்
தெரிவித்த அவர், அம்மூவரும் தண்டனைச் சட்டத்தின் 379ஏ பிரிவின் கீழ் விசாரணைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.


