கோலாலம்பூர், ஜன. 31- இங்குள்ள ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள கேளிக்கை மையத்தின் முன் நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு வாகனங்கள் ஆபத்தான முறையில் செலுத்தப்பட்டச் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்துள்ள வேளையில் இன்னும் தலைமறைவாக உள்ளவர்கள் விரைந்து சரணடையுமாறு கோலாலம்பூர் துணைக் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் ஆயோப் கேட்டுக் கொண்டனர்.
இருபது முதல் 30 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் நேற்று சிலாங்கூரில் உள்ள பந்திங்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த கால குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 6.18 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் டோயோட்டா ஹைலக்ஸ் மற்றும் டோயோட்டா வியோஸ் ஆகிய இரு வாகனங்கள் கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பொழுதுபோக்கு நிலையத்திற்கு முன்னால் உள்ள சாலை வழியாக வெளியேறியதை உள்ளூர் ஆடவர் ஒருவர் கண்டதாக அஸ்ரி அக்மர் கூறினார்.
அந்த இரண்டு வாகனங்களும் கூட்டத்தினர் மீது மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்
சந்தேகநபர்கள் அனைவரையும் விசாரணைக்காக தடுத்து வைப்பற்கு இன்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்படும் எனக் கூறிய அவர், குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.
சம்பவம் தொடர்பான தகவல்களை கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-21159999 அல்லது பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்பாட்டு அறைக்கு 03-22979222 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.


