புதுடில்லி, ஜன.26 - கலாச்சாரம், சுகாதாரம், கடல்சார், பாதுகாப்பு மற்றும் இலக்கவியல் துறைகளை உள்ளடக்கிய விரிவான அளவிலான ஒப்பந்தங்களில் இந்தோனேசியாவும் இந்தியாவும் நேற்று கையெழுத்திட்டன.
இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் விழாவை பார்வையிட்டனர்.
இந்தியாவுடனான பொருளாதார பங்காளித்துவத்தை தமது நாடு விரைவுபடுத்தும் என்பதோடு நீண்டகால ஒத்துழைப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் என்று அதிபர் சுபியாந்தோ கூறினார்.
ஒத்துழைப்பின் அளவை விரைவுபடுத்த விரும்புகின்ற பொதுவான ஆர்வமுள்ள பல முக்கிய துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரபோவோ தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராகும் இந்தோனேசியாவின் முயற்சிக்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பிரபோவோ நன்றி தெரிவித்தார். அந்த கூட்டமைப்பின்
வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள் "உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்குப் பயனளிக்கும்" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றார்.
கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு போன்ற விஷயங்களிலும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளோம் என்று மோடி கூறினார்.


