ஹெமில்டன், (கனடா) ஜன. 24 - மன அழுத்தம், பதட்டம் மற்றும்
தற்கொலை தொடர்பான எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கு
காஸவிலுள்ள பத்து லட்சம் சிறார்களுக்கு மனநல மற்றும்
உளவியல்பூர்மான ஆதரவு தேவை என்று ஐக்கிய நாடுகள் சபையின்
(ஐ.நா.) உதவிப் பிரிவுத் தலைவர் கூறினார்.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தம் இடைவிடாத
தாக்குதல்களிலிருந்து பாலஸ்தீன மக்களுக்கு விடியலை
ஏற்படுத்தியுள்ளது என்று டோம் பிளெட்சர் கூறினார். காஸாவிலுள்ள
சிறார்கள் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் கலந்துரையாடல்
நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
போர் நிறுத்த விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதை உறுதி
செய்வது அவசியமாகும். அதே சமயம், மனிதாபிமான உதவிகள்
பாதுகாப்பான முறையிலும் தடையின்றியும் வழங்கப்பட வேண்டும் என
அவர் வலியுறுத்தினார்.
காஸா நெருக்கடியின் தீவிரதத்தை விவரித்த பிளெட்சர், சிறார்கள்
கொல்லப்பட்டனர். பலர் பசியால் மற்றும் கடும் குளிரால் உயிரிழந்தனர்.
மேலும் பலர் உடல ஊனமுற்றவர்களாகவும் அனாதைகளாகவும்
ஆனார்கள். காஸாவில் தற்போது 17,000 சிறார்கள் குடும்பங்கள்
இல்லாதவர்களாக உள்ளனர் என்று அவர் சொன்னார்.
கர்ப்பிணிகளாக உள்ள 150,000 பெண்கள் மற்றும் புதிதாக குழந்தையை
ஈன்றவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு அதி முக்கியமாகத்
தேவைப்படுகிறது. பல குழந்தைகள் முதல் சுவாசக்காற்றை சுவாசிப்பதற்கு
முன்னரே பிரசவத்தின் போது தாயுடன் உயிரிழந்து விட்டன என்றார்
அவர்.
மன அழுத்தம், கவலை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்
கொண்டுள்ள சுமார் பத்து லட்சம் சிறார்களுக்கு மனோவியல் மற்றும்
உளவியல் ரீதியாக உதவி தேவைப்படுகிறது. இதனை அனைத்துலக
சமூகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
என அவர் கேட்டுக்கொண்டார்.


