கோலாலம்பூர், ஜன 20 : அழிந்து வரும் காட்டு விலங்குகளில் ஒன்றான `Prionailurus bengalensis` எனும் சிறிய காட்டுப் பூனைகளை, ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை செலவு செய்து வாங்க, ஆட்கள் தயாராக உள்ளது கண்டறியப்பட்டது.
`Kucing batu` அல்லது சிறுத்தைப் பூனை என்றும் அழைக்கப்படும் அப்பூனைகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தையிலும் இணையத்திலும் விற்கப்படுகின்றன.
அரிய வகை விலங்குப் பிரியர்கள் மத்தியில், அதற்கு பெரும் வரவேற்பு உள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான `PERHILITAN` தெரிவித்தது.
அண்மையில் கோலா லங்காட்டில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்ட சோதனையில், 2 சிறுத்தைப் பூனைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
அதே வேளையில், 6 சருகுமான்களும் `Kijang` எனப்படும் 1 மானும் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டன.
இறைச்சிக்காகவும், விற்பதற்காகவும் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடிய 3 ஆடவர்கள் கைது ஆகினர்.
33,000 ரிங்கிட் மதிப்பிலானவை என நம்பப்படும் விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக PERHILITAN கூறியது.


