ஈப்போ, ஜன. 16: ஜனவரி 12ஆம் தேதி முதல் காணாமல் போன 87 வயது முதியவர் நேற்று பாங்கோர் தீவில் உள்ள பாசிர் போகக் கடற்கரையில் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் காலை 11.24 மணியளவில் கிடைத்ததும் பாங்கோர் காவல் நிலைய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துட் ரஹ்மான் கூறினார்.
ஜோகூர் பாருவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்முதியவர் காணாமல் போனது கண்டறிந்துள்ளதாகவும், அவர் தனியாக வெளியே சென்றதாக தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
"இச்சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் பாங்கோர் காவல் நிலையத்திற்கு வரலாம். மேலும், 05-6851222 அல்லது மஞ்சோங் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) செயல்பாட்டு அறையை 05-6886222 மற்றும் வாட்ஸ்சாப் 014-6828005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் ஹஸ்புல்லா கூறினார்.
– பெர்னாமா


