கோலாலம்பூர், ஜன. 15 - ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் பேராக்,
சரவாக் மற்றும் பகாங்கில் நிலைமையில் மாற்றமில்லை.
ஜோகூர்
இன்று காலை 8.00 மணி நிலவரப்டி இம்மாநிலத்திலுள்ள நான்கு
மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 12 தற்காலிக நிவாரண மையங்களில்
329 குடும்பங்களைச் சேர்ந்த 1,097 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில
பேரிடர் மேலாண்மைச் செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ அஸ்மி
ரோஹானி கூறினார். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,092 பேராக இருந்தது.
குளுவாங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 415 பேர் நிவாரண
மையங்களில் தங்கியுள்ள வேளையில் பொந்தியானில் 354 பேரும்
கோத்தா திங்கியில் 275 பேரும் ஜோகூர் பாருவில் 53 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கோத்தா திங்கி, ஜாலான் மாவாய் லாமா சாலை
அனைத்து விதமான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக அஸ்மி
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பேராக்
பேராக் மாநிலத்தின் மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாடாங்
செராய், கம்போங் காசி, கம்போங் பெங்காலான் டாமார் கிராமங்களில்
வசிக்கும் 9 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தொடர்ந்து வெள்ள நிவாரண
மையத்தில் தங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பாடாங் செராயில் உள்ள வெள்ளத் துயர் துடைப்பு
மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை
செயலகம் கூறியது.
பகாங்
இங்குள்ள ரொம்பின் மாவட்டத்தின் கம்போங் ஜாவா பாலாய் ராயாவில்
திறக்கப்பட்டுள்ள ஒரு நிவாரண மையத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த
186 பேர் தங்கியுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்
அகப்பக்கம் கூறியது.
சரவாக்
சரவாக் மாநிலத்தின் கனோவிட் விளையாட்டு தொகுதியில்
திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் 20 பேர் அடைக்கலம்
நாடியுள்ளனர்.


