கோலாலம்பூர், ஜன. 12- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேராக் மற்றும் திரங்கானுவில் நிலையில் மாற்றமில்லை.
ஜோகூரில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 3,449 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 2,524 பேராக இருந்தது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,023 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஐந்து மாவட்டங்களில் உள்ள 36 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான கோத்தா திங்கியில் 1,160 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் கூலாய் மாவட்டத்தில் 748 பேரும் ஜோகூர் பாருவில் 605 பேரும் குளுவாங்கில் 506 பேரும் பொந்தியானில் 430 பேரும் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் நேற்றிரவுடன் ஒப்பிடுகையில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்று மாவட் பேரிடர் மேலாண்மை செயல்குழு செயலகம் தெரிவித்த து.
மஞ்சோங் மாவட்டத்தின் பெருவாசில் உள்ள பாடாங் சிராய் மக்கள் சமயப் பள்ளியில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கம்போங் பாடாங் சிராய், கம்போங் காசி மற்றும் கம்போங் பெங்காலான் டாமாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் கடந்த வியாழக்கிழமை முதல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, திரங்கானு மாநிலத்திலும் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு செயலகம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட 16 பேரும் கெமமான், கம்போங் பந்தாய் கெலிகா பாலாய் ராயாவில் நேற்று தொடங்கி தங்கியுள்ளதாக அது குறிப்பிட்டது.


