கோலாலம்பூர், ஜன.10 - தெருநாய் தாக்கியதில் பூனை உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பல்கலைக்கழகம், தனது அதிகார வரப்பிற்குட்பட்ட பகுதியில் விலங்குகளின் நடமாட்டதைக் கையாள்வதற்கான உள்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அந்த பொது உயர்கல்வி நிறுவனத்தில் பல தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை ஒழிப்பதற்கான தங்களின் நடவடிக்கைகள் குறித்து அந்த பல்கலைக்கழகம் எப்போதும் காவல்துறைக்கு தெரிவிக்கிறது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாமுட் கூறினார்.
இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் உள் நடவடிக்கையாகும். ஏனென்றால் அங்கு அவர்களுக்கு சொந்தமான பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறையும் உள்ளது. மேலும் நாம் அறிந்தபடி தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை விலங்கு ஆர்வலர்களின் உதவியுடன் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இன்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வழக்குப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பெறப்பட்ட ஒரு பூனையின் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள், வனவிலங்கு கடித்ததால் அப்பூனை இறந்ததைக் காட்டுகின்றன. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து பூனைகளின் உடல்களும் விலங்குகளின் தாக்குதலின் விளைவாக மரணம் நேர்ந்ததை உறுதிப்படுத்துகின்றன என்றார் அவர்.
அந்த பல்கலைக் கழகத்தில் பூனைகள் மடிந்தது தொடர்பில் விரிவுரையாளர்கள், வழக்குரைஞர்கள், துணை போலீஸ், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களிடம் இருந்து 11 வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பல்கலைக்கழக பகுதியில் மற்றொரு பூனை இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது தெரு நாயின் வேலை என்பதால் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.


