சிரம்பான், ஜன 10: நேற்றிரவு நீலாயில் உள்ள ஓர் உணவகத்திற்குள் ஆயுதங்களுடன் வந்த கும்பல் தாக்கியதில், 4 பேர் காயமடைந்தனர்.
இரவு 10 மணியளவில் 44 முதல் 59 வயதுடைய நான்கு ஆண்கள் தாக்கப்பட்ட இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தனது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்று நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் கூறினார்.
கடையில் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் ஐந்து உள்ளூர் ஆட்கள் கொண்ட கும்பலால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
"காயமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக துங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 148 மற்றும் பிரிவு 326 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், நீலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 06-7902222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பெர்னாமா


