ஷா ஆலம், ஜன. 7- மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு
வலுவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 4.0 முதல் 5.5 விழுக்காடு வரை இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சியின்
அடிப்படையில் இந்த பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளதாக
பொருளாதார நிபுணரான நிறை நிலைப் பேராசிரியர் டாக்டர் பெர்ஜோயாய்
பர்டாய் கூறினார்.
2025ஆம் ஆண்டைப் பொறுத்த வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4
முதுல் 4.8 விழுக்காடு வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்
2026ஆம் ஆண்டுவாக்கில் இந்த வளர்ச்சி உச்சத்தை அடையும் என்று அவர்
தெரிவித்தார்.
இந்த வளர்ச்சிக்கு தயாரிப்பு மற்றும் சுற்றுலாத் துறைகள் முக்கியப்
பங்கினை ஆற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் ட்ரம்ப் வெள்ளை
மாளிகையில் அடியெடுத்து வைப்பது அந்நாட்டு பொருளதாரத்தை பெரிதும்
சார்ந்திருக்கும் மலேசியாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்
அவர் சொன்னார்.
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் மலேசியாவின் நடவடிக்கை அமெரிக்க
டாலரை பெரிதும் சார்ந்திருப்பதை குறைக்கும் மலேசியாவின்
நோக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான மலேசியாவின் ஏற்றுமதி 30 விழுக்காடு
அதிகரித்துள்ள போதிலும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 100 விழுக்காடு
வரி விதிக்கும் டோனால்ட் ட்ரம்பின் திட்டம் நாட்டிற்கு பெரும் சவாலாக
அமையும். இருப்பினும் சீனாவின் விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்தும் அனைத்துலக நிறுவனங்களின் முயற்சி மலேசியாவுக்கு சாதமான பலனைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், மடாணி பொருளாதார வடிவமைப்பு சாதகமான தொடக்கக்
கட்ட அறிகுறியைக் காட்டியுள்ளது. 30,000 கோடி வெள்ளி மதிப்பிலான
முதலீடு ஈர்ப்பு மற்றும் குறைந்த பட்ச சம்பள விகித உயர்வு ஆகியவை
இதற்கு சான்றாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.


