கோலாலம்பூர், ஜன. 2- மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ் பி.எம்.) 2024 தேர்வு இன்று தொடங்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள 3,000 தேர்வு மையங்களில் 400,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.
கிளந்தான், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதிலும்
முக்கியமான இந்த தேர்வை எழுதும் மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் பெரும்பாலான மாநிலங்களில் இன்று காலை வானிலை தெளிவாகக் காணப்பட்டது.
மலாய் மொழித் தாள் 1க்கான தேர்வு இன்று சரியாக காலை 8.15 மணிக்குத் தொடங்கிய வேளையில் தேர்வு தொடர்பான விளக்கமளிப்பில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் முன்கூட்டியே வந்து மண்டபத்திற்குள் அமர்ந்திருப்பதை பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் காண முடிந்தது.
நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள 160 தேர்வு மையங்களில் மொத்தம் 20,676 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் 15,846 அரசுப் பள்ளி மாணவர்களாவர். இவர்கள் தவிர, 238 அரசு நிறுவனப் பள்ளி மாணவர்களும் 2,626 தனியார் பள்ளி மாணவராகளும் இத்தேர்வில் பங்கேற்கும் வேளையில் 1,966 பேர் தனிப்பட்ட முறையில் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
அந்த எண்ணிக்கையில் 110 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்புக் கல்வித் தேவைகள் (எஸ்இ.பி.) உடையவர்கள் என்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசக் கல்வித் துறையின் இயக்குநர் மெகாட் அப்பாண்டி இஸ்மாயில் கூறினார்.
கோலாலம்பூரிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒன்பது மாணவர்கள் தேர்வு எழுதுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். அமாமாணவர்கள் உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


