ஷா ஆலம், டிச. 31 - கடந்த சனிக்கிழமை கோல லங்காட்டில் உள்ள ஆர்.டி.பி. சுங்கை சாங்காங்கில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காஜாங்கில் இளம் பெண் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கும் சாத்தியத்தை காவல்துறை நிராகரிக்கவில்லை.
பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதி செய்த சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான், மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அந்த உடலை அடையாளம் காண முடியவில்லை என்றார்.
அந்த உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பத்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. சோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த 15 வயது சிறுமி கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி மாலையிலிருந்து காணாமல் போனது தொடர்பில் அவரின் காதலன் போலீசில் புகார் அளித்திருந்ததாக ஹூசேன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து காணாமல் போன நபர் தொடர்பான விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது. தற்போது பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்காக இது மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கொலைக்கன நோக்கம் இன்னும் விசாரணையில் இருப்பதாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் காதலன் உட்பட 16, 20 மற்றும் 51 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 5ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி செராஸ், 11வது மைல் கூடைப்பந்து மைதானத்தில் சிங்க நடன பயிற்சியில் கலந்து கொண்டிருந்த இளம் பெண்ணான யாப் சின் யுவான் (வயது15) காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


