கோலாலம்பூர், டிச. 31- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக துயர்
துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை இன்று காலை
சற்று உயர்ந்துள்ளது. அதே சமயம் கிளந்தானில் நிலைமை சீரடைந்து
வரும் நிலையில் திரங்கானுவில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை.
ஜோகூரில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 14 குடும்பங்களைச்
சேர்ந்த 52 பேர் கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள இரு துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை
செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
நேற்றிரவு ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மட்டுமே தற்காலிக
வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
கிளந்தான் மாநிலத்தின் தானா மேரா மாவட்டத்தில் வெள்ள நிலைமை
சீரடைந்து வருகிறது. நேற்றிரவு 278 குடும்பங்களைச் சேர்ந்த 573 பேராக
இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 135 குடும்பங்களைச் சேர்ந்த 476 பேராகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் இங்குள்ள ஏழு வெள்ள துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளனர் என்று மாநில சமூக நலத் துறையின்
பேரிடர் தகவல் அகப்பக்கம் கூறியது.
திரங்கானு மாநிலத்தைப் பொறுத்த வரை வெள்ள நிலைமையில் எந்த
மாற்றமும் இல்லை. அம்மாநிலத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர்
நிவாரண மையங்களில் தொடர்ந்த அடைக்கலம் நாடியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பெசுட், கம்போங் லா பள்ளிவாசல் மற்றும்
கம்போங் பெலாவோ திறந்த வெளி மண்டபத்தில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு செயலகம்
தெரிவித்தது.


