கெய்ரோ, டிச 30: எகிப்து நாட்டின் பிரபல உல்லாசத்தலமான மார்சா ஆலாமில் சுறா மீன் தாக்கி சுற்றுலாப் பயணி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் மற்றொருவர் காயமடைந்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எகிப்து சுற்றுச்சூழல் அமைச்சு இன்னும் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் வட மார்சா ஆலாமில் ஜெட்டிகளுக்கு அருகில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட நீச்சல் மண்டலத்திற்கு வெளியே ஆழமான நீர் பகுதியில் நடந்துள்ளது.
இதனால், அவ்விடம் தடைசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஜெட்டிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மார்சா ஆலாம் உல்லாசத்தலமானது புகழ்பெற்ற எகிப்திய கடற்கரை நகரமாகும்.
இந்த செங்கடலில் சுறா மீன்கள் மனிதர்களை தாக்குவது மிகவும் அரிது. ஆனால், எகிப்தில் கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் மார்சா ஆலாமிற்கு வடக்கே செங்கடலில் உள்ள மற்றொரு கடலோர நகரத்தில் சுறா மீன் தாக்கி ஒரு ரஷ்ய நாட்டவர் இறந்தார்.


