கோல கிராய், டிச. 30 - நேற்று தொடங்கி வெள்ளம் சூழ்ந்துள்ள கோல
கிராய் மாவட்டத்தில் தெளிவான வானிலை காரணமாக இன்று நிலைமை
சீரடையத் தொடங்கியுள்ளது. இங்குள்ள ஆறுகளிலும் நீர் மட்டம்
வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இங்குள்ள சூச்சோ புத்ரியில் செயல்பட்டு வந்த மூன்று வெள்ள துயர்
துடைப்பு மையங்கள் இன்று காலை 11.00 மணியளவில் மூடப்பட்ட
வேளையில் செனுலாங்கில் உள்ள ஒரு மையம் மட்டும் தொடர்ந்து
செயல்பட்டு வருவதாக கோல கிராய் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு
மையத்தின் தலைவர் நிக் முகமது ஹசானுடின் நிக் ஹூசேன் கூறினார்.
இன்று காலை வானிலை தெளிவாகக் காணப்பட்டது. இந்நிலை தொடர்ந்து
நீடித்தால் கோல கிராயில் உள்ள அனைத்து வெள்ள நிவாரண
மையங்களும் இன்றைக்குள் மூடப்படும் என அவர் பெர்னாமாவிடம்
தெரிவித்தார்.
இதனிடையே, கோல கிராய் பகுதியில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம்
தற்போது வெகுவாக குறைந்துள்ளதைக் காண முடிந்தது. அதே சமயம்,
முக்கிய சாலைகளில் ஏற்பட்ட வெள்ளமும் தற்போது குறைந்து
காணப்படுகிறது.


