புது டில்லி, டிச. 29- மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நல்லுடல் நேற்று அரசாங்க மரியாதையுடன் புதுடில்லி யமுனா நதிக் கரையில் தகனம் செய்யப்பட்டது.
இந்திய கொடி போர்த்தப்பட்ட மன்மோகன் சிங்கின் நல்லுடல் குருமார்கள் மந்திரம் ஓத, சிக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது நல்லுடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சடங்குப்பூர்வ இராணுவ வாகனத்தில் தலைநகர் டில்லியில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
அவரது உடலில் இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு காவி நிற துணையால் போர்த்தப்பட்ட தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியப் பிரதமராக பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த மன்மோகன் சிங் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தனது 92வது வயதில் காலமானார்.
இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் அனுதாபம் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் மன்மோகன் சிங்கின் நல்லுடலுக்கு அனுதாபம் செலுத்தினர். மன்மோகன் சிங்கிற்கு நினைவு மண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கித் தர நரேந்திர மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத் தாராளமயக் கொள்கையின் சிற்பி என அழைக்கப்படும் மன்மோகன் சிங், மோடி அரசின் பண மதிப்பிழப்பு, பொருள் சேவை வரி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.


