கோலாலம்பூர், டிச. 24- பெருநாள் மற்றும் பள்ளி ஆண்டு இறுதி
விடுமுறையை முன்னிட்டு சாலை புக்கிட் அமான் போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கத் துறை நேற்று தொடங்கி வரும் ஜனவரி 2
வரை ஓப் லஞ்சார் சாலை பாதுகாப்பு இயக்கத்தை நடத்துகிறது.
பிரதான சாலைகளில் போக்குவரத்து சீராக்க இத் திட்டம் மூலம் நெரிசலைக்
கட்டுப்படுத்துவது மற்றும் சாலைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை
உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த இயக்கம்
அமல் செய்யப்படுவதாக அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது
யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
இந்த விடுமுறை காலத்தை முன்னிட்டு வடக்கு-கிழக்கு நெடுஞ்சாலை
(பிளஸ்), கிழக்குக் கரை நெடுஞ்சாலை, நாட்டின் இதர நெடுஞ்சாலைகள்,
கூட்டரசு மற்றும் மாநில சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து
அதிகரிக்கும் என்பதை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளிலும் இலகு ரக வாகனங்களுக்கு இன்று தொடங்கி இரு
தினங்களுக்கு இலவச டோல் கட்டண சலுகை வழங்கப்படும் என
அரசாங்கம் அறிவித்துள்ளது பிளஸ் நெடுஞ்சாலைகளை தினசரி 21
லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று அந்த
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் கடந்த 17ஆம் தேதி கூறியிருந்தது.
வாகன எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சாலையைக்
கவனமுடன் பயன்படுத்தும்படி முகமது யூஸ்ரி வாகனமோட்டிகளை
கேட்டுக் கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பில் வாகனங்களை
செலுத்தும் வேளையில் மது அல்லது போதைப் பொருளை பயன்படுத்த
வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் வாகனமோட்டிகள் சாலை சமிக்ஞை விளக்குகளைப் பின்பற்றி
நடக்க வேண்டும். பயணத்தை தொடங்குவதற்கு முன் வானிலை
தொடர்பான தகவல்களையும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து
தொடர்பான நிலவரங்களையும் அறிந்திருக்க வேண்டும என்றார் அவர்.


