கோத்தா பாரு, டிச. 19 - ஜெலி, கம்போங் பாலா கிராமத்தில் புகுந்து
குடியிருப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த மூன்று காட்டு
யானைகளை வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலித்தான்) நேற்று வெற்றிகரமாக பிடித்தது.
காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்தது தொடர்பில் இரு தினங்களுக்கு
முன்னர் தாங்கள் புகாரைப் பெற்றதாக கிளந்தான் மாநில வன விலங்கு
மற்றும் தேசிய பூங்கா துறையின் இயக்குநர் முகமது ஹபிட் ரோஹானி
கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜெலி மாவட்ட பெர்ஹிலித்தான் மற்றும் கிளந்தான்
யானை பிடிப்பு பிரிவு உறுப்பினர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு
அந்த மூன்று யானைகளையும் பிடித்தனர் என்று அவர் சொன்னார்.
இந்த யானைகள் பிடிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பெரும்
மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளதோடு பயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு
சேதம் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அந்த யானைகளை பொருத்தமான மற்றும் பாதுகாப்பான பகுதிக்கு
மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத்
தவிர்க்க பொதுமக்கள் குறிப்பாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்
யானைகளின் தடம் என கருதப்படும் இடங்களில் நீல நிற ஒளியைப்
பாய்ச்சக்கூடிய விளக்குகளைப் பொருத்தும் அதே வேளையில்
தோட்டங்களில் அந்த வன விலங்குகள் நுழையாமலிருப்பதை உறுதி
செய்ய மின் வேலிகளை அமைக்கும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.


