புத்ராஜெயா, டிச. 16- இரண்டு நாள் அதிகாரப்பூர் வருகை மேற்கொண்டு
மலேசியா வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பயேதோங்டார்ன் சினவத்ராவுக்கு
இங்குள்ள புத்ரா பெர்டானாவில் இன்று காலை அதிகாரப்பூர் வரவேற்பு
நல்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமராகப் பதவியேற்றப் பிறகு பிரதமர்
பயேதோங்டார்ன் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம்
இதுவாகும். காலை 9.00 மணிக்கு புத்ரா பெர்டானா வந்தடைந்த அவரை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். பின்னர் இரு நாட்டு
தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அரச ரேஞ்சர் படையின் (சடக்குப்பூர்வ) முதலாம் பட்டாளத்தின் மூன்று
அதிகாரிகள் மற்றும் 102 உறுப்பினர்கள் வழங்கிய மரியாதை
அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் பயேதோங்டார்னின் கணவர் பிடோக்
சக்சவாஸ் மற்றும் பிரதமர் அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர்
வான் அஜிசா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்புச் சடங்கில் துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர்
அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், அமைச்சர்கள், வெளிநாட்டு அரச
தந்திரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வுக்குப் பின்னர் வருகையாளர் புத்தகத்தில்
கையெழுத்திட்ட பயேதோங்டார்ன், பிரதமர் அன்வாருடன் மலேசியா-
தாய்லாந்து வருடாந்திர ஆலோசகச் செயல்திட்டம் மீதான கூட்டத்தில்
கலந்து கொண்டார்.
இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது, ஒத்துழைப்புக்கான புதிய
வாய்ப்புகளை கண்டறிவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கலை, கலாச்சாரம்,
பாரம்பரியம் மற்றும் ரப்பர் தொழில்துறை மேம்பாடு மற்றும் பொருளாதார
ஒத்துழைப்பு தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும்
சடங்கைப் பார்வையிடுவர்.


