கோலாலம்பூர், டிச. 15- ஜோகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 47 பேராக தொடர்ந்து இருந்து வருகிறது.
ஜோகூர் மாநிலத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சிகாமாட், பூலோ காசாப்பில் உள்ள சுங்கை மூவார் நிலையம் எச்சரிக்கை அளவைத் தாண்டி 8.80 மீட்டரை பதிவு செய்ததுள்ளதாக அவர் தெரிவித்தார். மெர்சிங்கில் உள்ள சுங்கை பாயா டத்தோ (1.45 மீட்டர்) மற்றும் மூவார் நதியில் நீரின் அளவு (3.30 மீட்டர்) எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.
ஜோகூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்று காலை வானம் தெளிவாக இருக்கும். மெர்சிங்கில் மட்டும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேராக தொடர்ந்து இருந்து வருகிறது. அவர்கள் அனைவரும் மாரானிலுள்ள கம்போங் பாரு பெர்தானியான் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .
இதற்கிடையில், பகாங்கில் உள்ள ஒரே ஒரு முக்கிய நதியான பகாங் ஆற்றின் லுபோக் பாக்கு பகுதியில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டி 18.57 மீட்டராகப் பதிவாகியுள்ளது.


